தமிழக முதலமைச்சராக விஜய் கடந்த மாதம் 10ஆம் தேதி பதவியேற்றார். திரைத்துறையில் கொடி கட்டிப் பறந்த விஜய், தனது சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் கால் பதித்தார். சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று முதலமைச்சராகவும் பதவியேற்றுள்ள நிலையில், திரைத்துறையைச் சேர்ந்த பலரும் விஜய்யை சந்தித்து வாழ்த்து கூறி வருகின்றனர்.
திரைத்துறையில் அவருடன் நடித்த நடிகர், நடிகைகள் பலரும் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து சந்தித்து விஜய்க்கு வாழ்த்து கூறி வரும் நிலையில், நேற்று நடிகை சமந்தாவும் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து கூறினார். இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் சமந்தா பதிவிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று நான் சென்னையில் தரையிறங்கியபோது, எனக்குள் ஒரு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது; ஏனெனில், நான் நமது முதலமைச்சரைச் சந்திக்கச் சென்றுகொண்டிருந்தேன்.
விஜய் சார் வெறும் திரையில் தோன்றும் ஒரு கதாநாயகனாக மட்டுமே இருக்கப் பிறந்தவர் அல்ல என்று நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அவரது ஆற்றல், ஆளுமை மற்றும் மக்கள் அவரிடம் காட்டும் ஈடுபாடு ஆகியவற்றைப் பார்க்கும்போது, அவர் ஏதோ ஒரு பெரிய நோக்கத்திற்காகவே உருவானவர் என்று தோன்றியது.
முற்றிலும் புதியதொரு களத்தில் அடியெடுத்து வைப்பதற்குத் தேவைப்படும் துணிச்சல்தான் என்னை மிகவும் ஈர்க்கிறது. ஏற்கனவே தேர்ச்சி பெற்ற ஒரு துறையை விட்டுவிட்டு, மிக உயர்ந்த சவால்கள் நிறைந்த ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுப்பது சாதாரணமானதல்ல. அது எளிதானது என்பதற்காக அல்ல, மாறாக ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையாலேயே அத்தகைய முடிவை எடுக்கிறோம்.
நமது வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில், நம்மைத் தாண்டிச் சிந்தித்து, சமூகத்திற்கு நாம் எவ்வாறு பங்களிக்க முடியும் என்று யோசிப்பதன் மூலம், இன்னும் பெரிய காரியங்களைச் செய்வதற்கான அழைப்பை நாம் அனைவரும் பெறுகிறோம் என்று நான் நினைக்கிறேன். ஆனால், மிகச் சிலரே அந்த அழைப்பை ஏற்றுச் செயல்படுகிறார்கள்.
விஜய் சார், அவர் மீது ஏற்கனவே நம்பிக்கை வைத்திருப்பவர்களையும் ஆச்சரியப்படுத்துவார் என்று எனக்குத் தோன்றுகிறது. அவர் வகிக்கும் பதவியின் காரணமாக அல்ல, மாறாக அவர் அந்தப் பணியை அணுகும் நோக்கத்தின் காரணமாகவே அவர் அப்படிச் செய்வார்.
அவருக்கு வலிமையும், ஞானமும், தனது பாதையில் உறுதியாகத் தொடர்வதற்கான துணிச்சலும் கிடைக்கட்டும் என்று வாழ்த்துகிறேன். மேலும், இதைப் பார்க்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் ஒரு செய்தி: நீங்கள் முதலில் கண்ட கனவை விட, வாழ்க்கை மிகப்பரியதாக அமையக்கூடும் என்பதை இது உங்களுக்கு நினைவூட்டுவதாக இருக்கட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.




