உலக மக்கள் தொகையில் 25% அதிகமான மக்களுக்கு வாய்ப்புண் ஏற்படுகிறது. கண்ணத்தின் உட்பகுதி, நாக்கு, உதடுகள் போன்ற எந்தப்பகுதியில் வேண்டுமானாலும் வாய்ப்புண்கள் வரலாம்.
மிகவும் கடினமாக பல் துலக்குதல், பற்கள் கூர்மையாக இருந்தால் அவை காயப்படுத்தும் போது, அளவுக்கு அதிகமாக காரமான உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், சூடான உணவுகள், பிற நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்து மற்றும் மாத்திரையினால் ஏற்படும் அலர்ஜி, ஹெர்பஸ் சிம்ப்ளக் போன்ற வைரஸ் தொற்றுகள் கேண்டியாசிஸ் போன்ற பூஞ்சை தொற்று, புகைபிடித்தல், அளவுக்கு அதிகமான மதுப்பழக்கம், மன அழுத்தம், வாய்ப்புண் வருவதற்கான மிகமிக முக்கியமான காரணம் உடலில் சத்துகள் குறைபாடு ஆகும. வைட்டமின் B3, இரும்பு, போலிக் ஆசிட் வைட்டமின் B12 போன்ற சத்துகள் உடலில் குறைந்தால் வாய்ப்புண்கள் ஏற்படும்.
வாய்ப்புண்களை தவிர்ப்பது எப்படி?
அதிகமான காரமான உணவுகள் மற்றும் சூடான உணவுகளை தவிர்ப்பது, பால், மோர், தயிர் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக்கொள்ளுதல் இவற்றிலுள்ள லேக்டோ பேசில்லஸ் உடலுக்கு நன்மை அளிக்கும். வைட்டமின் B12 அசைவ உணவுகளில் நிறைந்துள்ளது. இரும்புச்சத்து கீரைகள், பச்சை பட்டாணி, பீன்ஸ் அசைவ உணவில் கல்லீரல் போன்றவற்றில் அதிகம் உள்ளது.வைட்டமின் B3 பச்சைபட்டாணி, காளான், வேர்க்கடலை,பீன்ஸ் போன்றவற்றில் உள்ளது. இவற்றை உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் வாய்ப்புண்கள் வராமல் தடுக்கலாம்.
வாய்ப்புண்கள் குணமாக்குவது எப்படி
வாய்ப்புண்கள் (mouth ulcer) வருவதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள்
சாதாரண வாய்ப்புண்கள் தானாகவே 8 முதல் 10 நாட்களுக்குள் சரியாகிவிடும். வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளித்து வருதல், வெதுவெதுப்பான நீரில் சமையல் சோடா (பேக்கிங் சோடா) சேர்த்து வாய் கொப்பளிப்பதன் மூலம் வலி குறையும் புண்கள் விரைவில் குணமடையும். ஆல்கஹால் இல்லாத வாய் கழுவும் திரவம் போன்றவற்றை பயன்படுத்தலாம். வாய்ப்புண்களுக்கு மணத்தக்காளி கீரை மிகுந்த பயனளிக்கக் கூடியது. மணத்தக்காளி கீரையை பாசிப்பருப்பு, தேங்காய் போன்றவற்றுடன் சேர்த்து மசியல் செய்து சாப்பிடுவதன் மூலம் வாய்ப்புண்கள் விரைவில் ஆறும்.
கவனத்தில் கொள்ளவேண்டியவை
வாய்ப்புண்கள் நீண்ட நாட்கள் ஆறாமல் இருந்தால், மீண்டும் மீண்டும் தோன்றினால் வாய்ப்புண்களோடு பிறப்புறுப்பில் அல்லது சிறுநீர் கழிக்கும் இடத்தில் புண்கள் தோன்றினால் எடை இழப்பு, முடி கொட்டுதல் போன்றவை வாய்ப்புண்களோடு ஏற்பட்டால் அவை சில தீவிரமான நோய்களின் அறிகுறிகளாக இருக்கலாம். கட்டாயம் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.