கொட்டகலை பிரதேசத்தில் 200 ரூபா மண்ணெண்ணெய் பெற சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் இன்று அதிகாலை முதல் நிற்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கொட்டகலை பிரதேசத்திற்கு பத்து நாட்களுக்குப் பின் இன்றைய தினம் மண்ணெண்ணெய் விநியோகம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எண்ணை நிரப்பும் நிலையத்தில் விநியோகிக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து அப்பிரதேச மக்கள் தங்களுடைய அன்றாட கடமைகளையும் விட்டு விட்டு இரண்டு லிட்டர் மண்ணெண்ணெய் பெறுவதற்காக நீண்ட வரிசையில் நிற்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சமையல் எரிவாயு விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான மக்கள் மண்ணெண்ணை அடுப்பின் மூலமே சமைத்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பாரிய அளவு மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவுவதால் மண்ணெண்ணை பாவனையாளர்கள் பல மணித்தியாலங்கள் கிட்டதட்ட 18, 20 மணித்தியாலங்கள் வரிசையில் நின்று பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் சமைப்பதற்காக மண்ணெண்ணெய் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.
பெரும் எண்ணிக்கையிலான மக்கள் 200 ரூபா மண்ணெண்ணெய் பெறுவதற்காக் பகல் உணவினை கடையில் பெறவேண்டி உள்ளதாகவும் இரண்டு மூன்று தடவைகளுக்கு மேல் தேனீர் அருந்த வேண்டியுள்ளதாகவும் இதனால் மண்ணெண்ணை கொடுக்க வேண்டிய தொகையை விட மூன்று மடங்கு செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும் இதனால் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மேலும் மேலும் துன்ப நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இன்றைய தினம் மண்ணெண்ணெய் பெறுவதற்காக கொட்டகலை எண்ணை நிரப்பும் நிலையத்தில் இருந்து கொட்டகலை நகர் வரைக்கும் நீண்ட வரிசை காணப்பட்டன இந்த வரிசைகளில் முதியோர்கள் சிறுவர்கள் இளைஞர்கள் தாய்மார்கள் கர்ப்பிணி தாய்மார்கள் பலரும் நின்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மண்ணெண்ணெய் பெறுவதற்காக அதிகமானவர்கள் வரிசையில் நிற்பதனால் 200 ரூபாவுக்கு மாத்திரம் மண்ணெண்ணெய் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் குறித்த மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்கு வீட்டின் மின்சார பட்டியல் கொண்டுவருவதற்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மலைவாஞ்ஞன்