ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா போடைஸ் பகுதியில் இன்று மாலை பெய்த கடும் மழை காரணமாக போடைஸ் ஆறு பெருக்கெடுத்துள்ளது இதனால் அப்பகுதியிலுள்ள 27க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வெள்ளநீர் புகுந்துள்ளன.

போடைஸ் பகுதியில் போடைஸ் தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள வீதி நீரில் மூழ்கியமையினால் டிக்கோயா போடைஸ் ஊடாக போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் தடைப்பட்டன. இதனால் அக்கரபத்தனை,மன்ராசி,டயகம உள்ளிட்ட பிரதேசங்களுக்கு செல்லும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
குறித்தபகுதியில் வெள்ள நீர் விவசாயக் காணிக்களுக்குள் பெருக்கெடுத்தமையால் விவசாய நிலங்களும் பாதிப்புக்குள்ளாகின. குறித்த வெள்ளம் காரணமாக இப்பகுதியில் வசிக்கும் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையை காரணமாக பல பகுதிகளுக்கு கடும் மழை பெய்து வருகிறது.

நீரேந்தும் பிரதேசங்களுக்கு பெய்து வரும் அதிக மழை காரணமாக நீர்த்Nதுக்கங்களில் நீர்மட்டமும் அதிகரித்து வருகின்றன. கெனியோன் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக கனியோன் நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளதாக மின்சாரசபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் நீர்த்தேக்கங்களுக்கு கீழ் தாழ்நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
கே.சுந்தரலிங்கம்.



