பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் மண்சரிவு – பெண் ஒருவர் பலி

0
199

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் மேற்பிரிவு தோட்டத்தில் 03.10.2022 அன்று அதிகாலை பெய்த கடும் மழையினால் வீட்டின் ஒரு பகுதி மண்சரிவு ஏற்பட்டு இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 46 வயதுடைய ராமசாமி காளியம்மா மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வீட்டில் சமயலறையில் தனது மகளுடன் இருந்த வேளையில் திடீரென சுவர் இடிந்து குறித்த பெண் மேல் விழுந்ததனால் உயிரிழந்துள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். எனினும் குறித்த பெண்ணின் மகள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளாக தெரிவித்த திம்புள்ள பத்தனை பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீரற்ற காலநிலை நிலவுவதனால் மண்சரிவு அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

க.கிஷாந்தன், மலைவாஞ்ஞன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here