வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி விவகாரம் _ பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ள ஜீவன்

0
188

வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் சிலை உடைத்து வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி முழுமையானதொரு அறிக்கையை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தான் வவுனியா, வெடுக்குநாறி மலைக்கு செல்லவுள்ளதாகவும், இதன்போது சேதமாக்கப்பட்ட சிலை மீள் பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

வவுனியா, நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் சிலை உடைத்து வீசப்பட்ட அதேபோல விக்கிரகங்களும் மாயமாகியுள்ள சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

” சம்பவம் தொடர்பில் அறிந்த பின்னர் நானும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தினோம். உரிய விசாரணைகளை முன்னெடுத்து, சட்டத்தை செயற்படுத்துமாறு ஜனாதிபதி பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்தார். நானும் இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளேன்.

இலங்கை முன்னேறுவதற்கு இன, மத நல்லிணக்கம் என்பது மிக முக்கியம். அதனை ஏற்படுத்துவதற்கு எமது அரசு தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் அதனை சீர்குலைக்கும் வகையில் இடம்பெறும் சம்பவங்கள் அனுமதிக்க முடியாது. அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ” – என்றும் ஜீவன் குறிப்பிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here