200 வருடங்கள் கடந்த போதும் மலையக மக்களின் வாழ்க்கையில் பாரிய மாற்றம் ஏற்படவில்லை:

0
221

மலையகத் தமிழ் மக்கள் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள போதும் இந்த மக்களின் வாழ்க்கையில் பாரிய மாற்றங்கள் ஏற்படவில்லை என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச்செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
அட்டனில் இன்று இடம் பெற்ற தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் செயற்பாட்டாளர்களுக்கான விசேட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசிய கூறியதாவது:

தமிழ்நாட்டில் இருந்து நமது சமூகம்
மலையகப் பிரதேசத்துக்கு வருகை தந்து இந்த வருடத்துடன் 200 வருடம் பூர்த்தியாகிறது.

அதாவது 1823 ஆம் ஆண்டு எமது சமூகம் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கூலிகளாக வரவழைக்கப்பட்டனர். இலங்கையின் பெருந்தோட்ட பயிர்ச்செய்கைக்காக ஆரம்பத்தில் சிறிய தொகையினராகவும் பிற்காலத்தில் பெருந்தொகையினராகவும் எமது சமூகத்தினர் வரவழைக்கப்பட்டனர்.
இந்த வருடம் 2023 உடன் இலங்கையில் எமது மக்களின் வருகை 200 வருடத்தைப் பூர்த்தி செய்துள்ளது.

“மலையகம் 200′ என்பதை நாம் நினைவு கூருவதன் ஊடாக கடந்த கால வளர்ச்சியை மறுபரிசீலனை செய்வதுடன் எதிர்கால வளர்ச்சிக்கு திட்டமிடுவதாகவும் இருக்க வேண்டும்.

எமது சமூகத்தினர் இந்த நாட்டில் வாழுகின்ற ஏனைய சமூகங்களை விட அடிப்படைத் தேவைகள், வாழ்வாதாரம் ,பொருளாதாரம் போன்றவற்றில் பின் தங்கியவர்களாகவே வாழ வேண்டிய நிலைமை இருக்கிறது. இந்த நாட்டின் பொருளாதாரத்துக்காகத் தம்மை அர்ப்பணித்துள்ள பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் சொற்பமான மாற்றங்களே இடம்பெற்றுள்ளன.

கல்வி,வீடு,காணியுரிமை, சுகாதாரம், தொழில் வாய்ப்பு, உள்ளூராட்சி நிர்வாகம் உட்பட பல துறைகளில் நாம் இன்னும் பின்தங்கியவர்களாகவே இருக்கின்றோம்.
இருப்பினும் அரசியல் தொழிற்சங்க வரலாற்றில் இந்த மக்களுக்குபா பல உரிமைகளையும் சலுகைகளையும் நாம் பெற்றுக் கொடுத்திருக்கிறோம்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இந்த மக்களுக்கு முக்கியமான சில உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதில் நமது தலைவர் திகாம்பரம் உட்பட தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர்கள் முன்னின்று செயல்பட்டனர்.

அந்த வகையில் எமது சமூகம் இந்த நாட்டுக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள போதும் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இதுவாகும்.
எமது மக்களின் முக்கியத்துவம் குறித்து எல்லோர் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

அந்த வகையில் “மலையகம் 200” முன்னிட்டு தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் எதிர்வரும் 12ஆம் திகதி நுவரெலியாவிலிருந்து அட்டன் வரை விழிப்புணர்வு பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம். இந்தப் பேரணியில் சகலரையும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று ஸ்ரீதரன் மேலும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here