மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) புகழுடல் யாழ். வடமராட்சி, உடுப்பிட்டியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அண்ணனின் புகழுடலைத் தங்கை ஆரத்தி எடுத்துப் பெற்றுக்கொண்டமை அங்கிருந்தவர்களைக் கண்கலங்கச் செய்திருந்தது.சாந்தனின் புகழுடல் நேற்று மாலை வீட்டுக்கு வரும்போது, “அண்ணா வாறார்; என் தெய்வம் வீட்டுக்கு வருகின்றது. யாரும் அழக்கூடாது” – என்று அதன்போது உருக்கத்துடன் சகோதரி கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் கனத்த இதயத்துடன் யாரும் அழாது இருந்த நிலையில், ஓம் நமசிவாய சொல்லி ஆரத்தி எடுக்கப்பட்டது.அதேவேளை, தன் மகனை உயிருடன் பார்க்க வேண்டும் என்று காத்திருந்த சாந்தனின் தாய் பல ஆண்டுகளுக்குப் பின் உயிரற்ற உடலைக் கண்டு கதறி அழுதார்.
சாந்தனின் இறுதிக்கிரியைகள், அவரது சகோதரியின் இல்லத்தில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகும்.இறுதிக்கிரியைகள் நிறைவு பெற்றதும் புகழுடல் எடுத்துச் செல்லப்பட்டு ஊரில் உள்ள சனசமூக நிலையத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து புகழுடல் சாந்தனின் பூர்வீக இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட பின் இறுதி யாத்திரை ஆரம்பமாகும். வல்வெட்டித்துறை, பொலிகண்டி ஊடாக எள்ளங்குளம் இந்து மயானத்துக்குப் புகழுடல் எடுத்துச் செல்லப்படும்.




