ஆசிரியை ஒருவரை கத்தியால் வெட்டி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு ஆசிரியை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை மாவட்ட நீதவான் நுஜித் டி சில்வா உத்தரவிட்டுள்ளதாக பதுளை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
46 வயதுடைய ஆசிரியை ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காயம் அடைந்த 44 வயது ஆசிரியை, பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார். கழுத்து மற்றும் கால் பகுதிகளில் அவருக்கு வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.
இரு ஆசிரியைகளும் வெவ்வேறு பாடசாலைகளில் சேவையாற்றுபவர்கள், இருவரும் நண்பர்கள். எனினும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் காரணமாக கடந்த 18 ஆம் திகதி காலை இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
ராமு தனராஜ்




