தோட்டக் கம்பனிகளுடன் கலந்துரையாடி, ஒரு குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் காணி வழங்கப்படும், அதற்கான ஒப்பந்தம் கைசாத்திடப்படும். அத்துடன் தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.1700 சம்பள அதிகரிப்பு தொடர்பாக அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்வோம் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது,
”தோட்டக் கம்பனிகளுடன் கலந்துரையாடி தோட்டங்களின் ஒரு பகுதியை அப்பகுதியினருக்கு வழங்குவோம். தோட்ட வேலைகளை செய்வதற்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் காணி வழங்கப்படும். கம்பனிகளுக்கு தேயிலை வழங்க வேண்டும் என்ற பிணைப்பு அவ்வண்ணமே பேணப்படும். அதற்கான ஒப்பந்தம் கைசாத்திடப்படும். தோட்டத்தை பராமரித்து சொந்தக் காணிகளாக பேணி தேயிலை பெற்றுக்கொடுத்து நல்ல வருமானத்தை ஈட்டுங்கள்.
இத்திட்டம் சில தோட்டங்களில் ஆரம்பகட்டமாக நடைமுறைப்படுத்தப்படும். தோட்டங்களிலும் லயன்களிலும் கட்டப்பட்ட நிலையில் இருக்கின்றவர்களை நாம் விடுவிக்க வேண்டும். இவ்வாறு கட்டப்பட்டிருக்கும் சமூகத்தினரை சுயாதீனமாக பிரஜைகளாக மாற்றுவது குறித்து சிந்திக்க வேண்டும்.
மிக விரைவில் அதற்காக ஆரம்ப திட்டங்களை சில தோட்டங்களில் செயற்படுத்தி கம்பனிகளுடன் இணைந்ததாக இந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம்.
அத்தோடு விட்டுவிடாமல் இந்த துறையில் இருக்கின்றவர்களின் பொருளாதாரத்தை கட்டமைக்க வேண்டும். சிறு மற்றும் மத்திய தர தொழில் முயற்சியாளர்களாக அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
அதற்கான தொழில்நுட்பத்தையும், கடன் உதவிகளையும் நாங்கள் வழங்குவோம். அதனால் எவரும் இந்நாட்டு பொருளாதாரத்தின் பிரதிபலன்களை நுகராதவர்களாக இருக்க முடியாது. மிக விரைவில் கிரகரி வாவிக்கு கேபிள் கார் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்.” என்றார்.