சிகிச்சையளித்து குணப்படுத்த முடியாத கொடூர நோயால் பாதிக்கப்பட்டவா்கள் தங்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு அனுமதி அளிப்பதற்கான சட்ட பிரேரணை பிரித்தானிய பாராளுமன்றத்தின் கீழவையினால் வெள்ளிக்கிழமை (20) நிறைவேற்றப்பட்டது.
பாராளுமன்ற கீழவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவாக 314 எம்.பி.க்களும் எதிராக 291 எம்.பி.க்களும் வாக்களித்துள்ளனர்.
இந்த பிரேரணை சட்டமாக்கப்பட்டால், பிரிட்டனின் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட, குணப்படுத்த முடியாத கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நபா்கள் வைத்தியர்களின் உதவியுடன் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள விண்ணப்பிக்க முடியும். எவ்வாறாயினும் அதற்கான மருந்தை தாங்களாகவே உட்கொள்ளும் திறன் நோயாளிகளுக்கு இருக்க வேண்டும்.
குறித்த பிரேரணை மேலவைக்குக் கொண்டு செல்லப்படும் சந்தர்ப்பத்தில் அங்கு பிரேரணையில் திருத்தங்கள் மேற்கொள்ளவோ, சட்டமாக்கலை தாமதப்படுத்தவோ மாத்திரமே முடியும் என்பதுடன் கீழவை நிறைவேற்றிய பிரேரணையை மேலவையால் நிராகரிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.