பெருந்தோட்ட மக்கள் தங்களுடைய இரத்தம், வியர்வை, கண்ணீர் சிந்தி உழைந்ததன் பலனாகவே இலங்கை இலவச கல்வியை வழங்கியது என, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
இது குறித்து ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய நேர்க்காணலில், இலங்கையில் இலவச கல்வி எங்கிருந்து வந்தது? பெருந்தோட்ட மக்கள் தங்களுடைய இரத்தம், வியர்வை, கண்ணீர் சிந்தி உழைந்ததன் பலனாகவே இலங்கை இலவச கல்வியை வழங்கியது. மற்றைய நாடுகளால் அவ்வாறு செய்ய முடியவில்லை. அவர்களுக்கு அப்போது உற்பத்தி மிகையாக இருக்கவில்லை.
இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் மிகப்பெரிய உபரி ஏற்படுவதற்கு வழிவகுத்ததும் பெருந்தோட்ட துறையாகும். பெருந்தோட்ட துறை இல்லாவிட்டால் இலங்கையால் இலவச கல்வி வழங்க முடியாமல் போயிருக்கும்.
பெருந்தோட்ட மக்கள் தமிழர்களாக இருப்பதாலேயே வரலாற்றில் பல பாதிப்புக்களை எதிர்கொண்டனர். எவ்வாறாயினும் இந்த நாடு அவர்களுக்கு நன்றியுள்ளதாக இருக்கத் தவறக்கூடாது. பெருந்தோட்ட மக்களுக்கு இதுவரையில் உரிய காணிகள் உள்ளிட்ட விடயங்கள் வழங்கப்படாமைக்கு யார் பொறுப்பு கூறுவது?
விவசாய உற்பத்திகளை போலவே கைத்தொழில் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டு நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டியது. அவசியம். ஆனால் அதற்காக மலையக மக்களின் வீட்டு, காணி உரிமைகள் மறுக்கப்படக்கூடாது.
முல்லைத்தீவின் வறுமை 39 சதவீதமாகவும், நுவரெலியாவின் வறுமை 23 சதவீதமாகவும் இருக்கையில் கொழும்பை மட்டும் வைத்துக்கொண்டு இலங்கை அபிவிருத்தி பயணம் செல்ல முடியாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.