இலங்கை வரலாற்றில் பிணை கோரலுக்காக அதிக சட்டத்தரணிகள் பங்கேற்ற சந்தர்ப்பத்தை கண்டுகொள்ள கிடைத்தமை ஐக்கிய தேசிய கட்சியினருக்கு மிகப்பெரிய வலுவாக அமைந்திருப்பதாக அக்கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தலதா அதுகோரல தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பிணை கோருவதற்காக இலங்கை வரலாற்றில் அதிகளவான சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி கூற வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியினருக்கு அது மிகப்பெரிய உந்து சக்தியாகும்.
கட்சி பேதமின்றி முன்னாள் ஜனாதிபதிக்காக சட்டத்தரணிகள் பலரும் மன்றில் ஆஜராகினர். மறுமுனையின் கட்சி ஆதரவாளர்கள் பலரும் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள எல்லாவ மத தலங்களுக்கும் சென்று பிரார்த்தனை செய்தமை நெகிழ்ச்சிக்குரியது என்றும் தெரிவித்தார்.




