’தாய் கிழவி’ படத்தினை சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனமும் தயாரித்திருக்கிறது. பிப்ரவரி 20-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை உரிமை, ஓடிடி உரிமை, தொலைக்காட்சி உரிமை மற்றும் வெளிநாட்டு உரிமை என அனைத்துமே விற்பனையாகிவிட்டது. இதனால் படம் வெளியாவதற்கு முன்பே படக்குழுவினர் நல்ல லாபம் ஈட்டிவிட்டார்கள்.
‘தாய் கிழவி’ குறித்து சிவகுமார் முருகேசன், “இயக்குநர் மணிகண்டனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். சிவகார்த்திகேயன் சார் இந்தப் படத்தின் கதையை கேட்டுவிட்டு நான் எதிர்பார்த்த நடிகர்கள், எதிர்பார்த்த பட்ஜெட்டை விட அதிகமாகவே கொடுத்து கதையில் எந்தவிதமான காம்ப்ரமைஸூம் செய்யாமல் நினைத்தபடியே எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்படியே படமும் நன்றாக வந்திருக்கிறது.
உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை பற்றிய கதையாகவும், அந்த நிலப்பரப்பில் வாழும் மக்களின் பழக்க வழக்கங்கள், பேச்சுநடை, அவர்களின் குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகள், சடங்குகள் ஆகியவற்றை பேசும் படமாக இது இருக்கும். இந்த விஷயங்களை ரொம்ப சீரியஸாக இல்லாமல் நகைச்சுவை கலந்து பொழுதுபோக்காக திரையரங்குகளில் மக்கள் ரசிக்கும்படி கமர்ஷியலாக எடுத்திருக்கிறோம்.