டொவினோ தாமஸ், கயாது லோஹர் நடிக்கும் படம் ‘பள்ளிச்சட்டம்பி’. டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ள இப்படத்தின் கதை 1950– 60களில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.
வேர்ல்ட் வைட் ஃபிலிம்ஸ் சார்பில் நவுஃபல் மற்றும் பிரிஜீஷ், சிக்யூப் ப்ரோஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சாணக்கியா சைதன்யா சரண் ஆகியோர் தயாரிக்கின்றனர். இதில் டொவினோ தாமஸ் புதிய தோற்றத்தில் நடிக்கிறார்.
மலையாளத்தில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் ஏப்.9ல் வெளியாக உள்ளது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள மலங்கரா நீர்த்தேக்கம் அருகே நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்ததும் செட் அமைக்கப் பயன்படுத்தப்பட்ட பொருட்களை அங்கேயே கொட்டிவிட்டுப் படக்குழுவினர் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரை அடுத்து ‘பள்ளிச்சட்டம்பி’ படக்குழுவுக்கு, இடுக்கி குடாயத்தூர் பஞ்சாயத்து ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது. இதையடுத்து ஜேசிபி மூலம் அங்கு கொட்டப்பட்ட குப்பைகளைப் படக்குழுவினர் அப்புறப்படுத்தினர்.




