அமெரிக்கா–ஈரான் இடையே இடைக்கால போர் நிறுத்தம் அமலில் இருக்கும் நிலையில், அதை நிரந்தரமாக்குவதற்காக கடந்த 11-ந்தேதி பாகிஸ்தானில் இரு தரப்பும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் உடன்பாடு எட்டப்படாததால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஈரானின் துறைமுகங்கள் உள்பட அதன் கடற்பகுதிகளை முற்றுகையிட்டது. இது ஈரானுக்கு கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், லெபனானில் சமீபத்தில் இடைக்கால போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணை கடந்த 17-ந்தேதி மீண்டும் திறக்கப்பட்டது. இதை டிரம்ப் வரவேற்றாலும், ஈரான் துறைமுகங்களின் முற்றுகையை அமெரிக்கா கைவிடாது என்று அவர் தெரிவித்தார்.




