யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியொன்றில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அவர்களின் 10 அடி உயர பதாகை நிறுவப்பட்டு, அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அர்ச்சுனா இராமநாதன் நடந்து கொள்ளும் விதம் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, தகாத வார்த்தைப் பிரயோகங்கள், சபை நாகரிகத்திற்கு முரணான நடத்தை மற்றும் கூட்ட நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயற்பாடுகளில் அவர் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், நேற்று (18) தெல்லிப்பளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. அவை பொதுமக்கள் மத்தியில் கடும் விவாதங்களையும் விமர்சனங்களையும் தூண்டியுள்ளன.
இந்தச் சூழ்நிலையிலேயே, யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் அர்ச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகை நிறுவப்பட்டு, அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பதாகை வழிப்போக்கர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், சமூக ஊடகங்களிலும் பரவலாக பேசுபொருளாக மாறியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை பொலிஸார் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பில் எந்த உத்தியோகபூர்வ கருத்தும் வெளியிடப்படவில்லை. அதேவேளை, இந்த நடவடிக்கைக்குப் பின்னால் யார் உள்ளனர் என்பது பற்றிய தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.
Malainaadu Media




