தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி 17-வது சட்டசபை தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4-ந் தேதி நடந்த நிலையில், திராவிட கட்சிகளை (தி.மு.க., அ.தி.மு.க.) பின்னுக்குத்தள்ளி, அரசியலுக்கு புது வரவான தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
என்றாலும், பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் த.வெ.க.வுக்கு கிடைக்காமல் போனதால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்தது. ஒரு வழியாக, காங்கிரஸ் (5), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (2), இந்திய கம்யூனிஸ்டு (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்ததால், த.வெ.க.வின் (107) பெரும்பான்மைக்கு தேவையான 120 இடங்கள் கிடைத்தன.
அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் (மே) 10-ந் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். தொடர்ந்து, மே 21-ந் தேதி நடைபெற்ற 2-வது அமைச்சரவை விரிவாக்கத்தில் 23 பேரும், 22-ந் தேதி நடைபெற்ற 3-வது அமைச்சரவை விரிவாக்கத்தில் 2 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அனைவருக்கும் துறைகளும் ஒதுக்கப்பட்டுவிட்டன.
தமிழக முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்று நாளையுடன் (ஜூன் 10) ஒரு மாத காலம் நிறைவடைகிறது. பதவியேற்ற நாள் முதல் இந்த ஒரு மாதத்தில் அவருடைய செயல்பாடுகள் எப்படி?, என்னென்ன கூட்டங்களை நடத்தினார்?, என்னென்ன புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்? என்பதை தேதி வாரியாக தொடர்ந்து பார்ப்போம்.
10-5-2026:- முதல்-அமைச்சராக பதவியேற்ற அன்றைய தினம் 3 கோப்புகளில் விஜய் கையெழுத்து போட்டார். “2 மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு 2 மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும். பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் போதைப் பொருள் கலாசாரத்தை ஒழிக்க, 65 போதைப்பொருட்கள் தடுப்பு படை அமைக்கப்படும்” என்பவைதான் அவை.
வெள்ளை அறிக்கை
தொடர்ந்து பேசிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், “தமிழக அரசின் கஜானா துடைக்கப்பட்டிருக்கிறது. ரூ.10 லட்சம் கோடி கடன் இருக்கிறது. தமிழக அரசின் நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” என்று அறிவித்தார்.
டாஸ்மாக் மூடல்
11-5-2026:- கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் அருகே செயல்படும் டாஸ்மாக் கடைகளை கண்டறிந்து மூடுவதற்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.
12-5-2026:- மொத்தம் 717 டாஸ்மாக் கடைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் அருகே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, முதல் நாளில் 50 கடைகள் மூடப்பட்டன.
13-5-2026:- தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. அரசு வெற்றி பெற்றது. ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் கிடைத்தன. 5 பேர் நடுநிலை வகித்தனர். தி.மு.க. வெளிநடப்பு செய்தது. பின்னர் பேசிய முதல்-அமைச்சர் விஜய், “மக்கள் நலனே எங்களுக்கு முக்கியம். முந்தைய அரசின் நலத் திட்டங்கள் தொடரும்” என்று உறுதி அளித்தார்.
அகவிலைப்படி உயர்வு
14-5-2026:- அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார். அதாவது, அகவிலைப்படி 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அன்றைய தினம், “ஜவுளி தொழிலுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யவேண்டும்” என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம் எழுதினார். பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய முதல் கடிதம் இது.
dailythanthi




