உத்தரபிரதேசத்தில் போதையில் இருந்த வாலிபர் ஒருவர் 11 கே.வி. உயர்அழுத்த மின்கம்பியில் ஏறி ஆபத்தான முறையில் படுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த மின்வாரியம், போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து அவரை பாதுகாப்பாக மீட்டனர்.
த்தரபிரதேச மாநிலத்தில் போதையில் இருந்த வாலிபர் ஒருவர் செய்த ஆபத்தான செயல் பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. உயர்அழுத்த மின்கம்பியில் ஏறி படுத்துக் கொண்ட அவரது செயல்பாடுகள் சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மகராஜ்கஞ்ச் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், மதுபோதையில் தள்ளாடியபடி சென்ற வாலிபர் ஒருவர் திடீரென அங்கிருந்த மின்கம்பத்தில் ஏறத் தொடங்கினார். அந்த கம்பத்தின் வழியாக 11 கே.வி. உயர்அழுத்த மின்சாரம் சென்றுகொண்டிருந்ததால், அவரை கவனித்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இருப்பினும், போதையில் இருந்த அந்த நபர் எதையும் பொருட்படுத்தாமல் மேலே ஏறி, மின்கம்பிகளின் மீது படுத்துக் கொண்டு ஆபத்தான செயல்களில் ஈடுபட்டார்.
சில நேரங்களில் கைகளை, கால்களை நீட்டி படுத்துக் கொண்டதோடு, உடலை புரட்டி படுத்தும் செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவரது ஒவ்வொரு அசைவும் கீழே நின்றிருந்தவர்களை பதற்றத்தில் ஆழ்த்தியது. தவறி கீழே விழுந்தால் உயிரிழப்பு ஏற்படக்கூடிய சூழல் இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட முயற்சிக்குப் பிறகு அந்த வாலிபர் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டார்.இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் செல்போனில் பதிவு செய்த நிலையில், அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான இத்தகைய செயல்களில் ஈடுபட வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.