இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் பதவி விலகுவதை விட நிரந்தரமாக பணியிலிருந்தே விலக்கப்பட வேண்டுமென மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்விடயத்தை தெரிவித்தார்.
கம்பளை புப்புரஸ்ஸ பகுதியில் வீட்டில் மின்சாரம் கட்டணம் கட்டப்படாமையால் அயல் வீட்டாரின் அனுமதியுடன் பிள்ளைகளின் கல்விக்காக மின்சாரம் எடுக்க முற்பட்ட போது மின்சாரம் தாக்கி தந்தையொருவர் உயிரிழந்துள்ள நிலையில் அது தொடர்பில் கருத்து வெளியிடும் போது இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் நோயல் பிரியந்த வெளியிட்ட கருத்து மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை உள்ளாக்கியது.
இது தொடர்பில் ராதாகிருஷ்ணன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்விடயத்தை சுட்டிக்காட்டினார்.அதாவது மின்சாரம் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதனால் 10லட்சத்துக்கும் அதிகமான பாவனையாளர்களின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.எனவே மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரை பற்றி பேசும் போது அவர் மலையகத்தை இழிவு படுத்தி பேசியுள்ளார்.எனவே தற்கால சூழ்நிலையில் நடைமுறை வாழ்க்கையை புரிந்து கொள்ளாமல் இவ்வாறு சமூகங்களையும் மக்களையும் இழிவு படுத்தி பேசும் நபர்களையும் உடனடியாக நிரந்தரமாக பணியிலிருந்து நீக்க வேண்டுமென ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்




