அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) நேரடி மோதல்கள் அதிகரித்துள்ளன.
இராஜதந்திர தீர்வுகள் எட்டப்படும் போதெல்லாம் அமெரிக்கா “முட்டாள்தனமான இராணுவ சாகசங்களில்” ஈடுபடுவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி (Abbas Araghchi) குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரானியத் துறைமுகங்களுக்குச் செல்ல முயன்ற இரண்டு எண்ணெய் தாங்கிக் கப்பல்களை அமெரிக்கப் படைகள் தாக்கி செயலிழக்கச் செய்துள்ளன.
அமெரிக்காவின் கடல்சார் முற்றுகையை (Naval Blockade) மீறியதால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் (Centcom) தெரிவித்துள்ளது.
உலகின் 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு, அமெரிக்க நட்பு நாடுகளின் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் இப்பகுதியில் சிக்கியுள்ள சுமார் 2,000 கப்பல்களை விடுவிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து பின்னர் இடைநிறுத்தியுள்ளார்.
“ஈரான் மிக விரைவாக அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திடாவிட்டால், எதிர்காலத்தில் இன்னும் கொடூரமான முறையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘Truth Social’ பக்கத்தில் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தைத் தணிக்கப் பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் மத்தியஸ்த முயற்சிகள் குறித்து அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance) மற்றும் கட்டார் பிரதமர் ஆகியோர் ஆலோசித்துள்ளனர்.
இதற்கிடையில், ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல்களை நிறுத்த மே 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் வாஷிங்டனில் பேச்சுவார்த்தைகளை நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
ஈரானின் கடலோரப் பகுதிகளில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் ஒரு சரக்குக் கப்பல் தீப்பிடித்ததில் 10 மாலுமிகள் காயமடைந்துள்ளதோடு, ஏனையோரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.




