பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி விலக்கி, அவரின் அரசியலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுத்துள்ள சதித்திட்டத்தின் ஒரு அங்கமாகவே பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (06) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கடற்றொழில் மற்றும் நீர்வாழ், உயிரின வளங்கள் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
‘‘ 06ஆம் தர பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய ஒரு விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது தற்போது வெளிவந்துள்ளது. இது திட்டமிடப்பட்ட ஒரு சதி. பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி விலக்குவதற்கும் அவரது அரசியலை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் ஜே.வி.பியின் தலைமையகத்தில் தீட்டப்பட்ட சூழ்ச்சியின் வடிவமாகவே இந்தப் பாடப்புத்தக சர்ச்சை உள்ளது.
தேசிய மக்கள் சக்தி எம்.பிக்கள் தாம் ஜே.வி.பியின் உறுப்பினர்கள் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. தேசிய மக்கள் சக்தி எம்.பிக்களின் மாதச் சம்பளம் பெலவத்த தலைமையக நிதியத்துக்கு செல்கிறது.
ஆகவே, கட்சியின் உறுப்புரிமையை பெறாமலே தேசிய மக்கள் சக்தியினர் ஜே.பி.வியின் உறுப்பினர்களாகியுள்ளார்கள். பொதுச் செயலாளர் டில்வின் சில்வா சாதாரணமானவரல்ல. பிரதமர் ஹரிணியை அவர்கள் விடப்போவதில்லை
இதேவேளை, கடற்றொழிலாளர்கள் பற்றி அதிக கவனம் செலுத்துவதாகவும் அவர்களின் நலன் பற்றி ஆராய்வதாகவும் அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் திங்கட்கிழமை எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு எவ்வித நிவாரணக் கொடுப்பனவும் வழங்கப்படவில்லை’’ என்றார்.




