நானுஓயா கெல்சி தோட்டத்தில் ஏராளமான பொருட்களைத் திருடிச் சென்று தனது வீட்டின் பின்புறத்தில் குழிதோண்டி புதைத்து வைத்த கள்ளன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், களவாடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தேதநபர் தொடர்பில் நானுஓயா பொலிஸ் நிலையத்தில் ஐந்து திருட்டு சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நானுஓயா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே கள்ளன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
நானுஓயா கெல்சி தோட்டத்தை சேர்ந்த 42 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர் நானுஓயா பிரதான நகர் , டெஸ்போட் தோட்டம் , கெல்சி தோட்டம் மற்றும் பெரக்கும்பர பகுதியில் விவசாயிகளின் தோட்டங்களிலும் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவரென தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கைது செய்யப்பட்டவரிடமிருந்து தொலைக்காட்சி, நீர்ப்பம்பி, சமையல் எரிவாயு சிலிண்டர் , மணிக்கூடு ,சமையல் அறை இலத்திரனியல் உபகரணங்கள் , குளியலறை உபகரணங்கள் , துவிச்சக்கர வண்டி , இரும்பு கம்பிகள் , போன்றன மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் மீட்கப்பட்ட பொருட்களையும் இன்று (30) நுவரெலியா நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னேடுத்துள்ளனர்.
நானுஓயா நிருபர்