அவரது வீட்டில் 1,080 போதை மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர். பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து வந்த நபரை களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் வழங்கிய பல முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்படும் போது, சந்தேகநபரிடம் இருந்து 6 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடம் நடத்திய விசாரணையில், அவரது வீட்டில் 1,080 போதை மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.