மத்திய மலைநாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையில் தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பல வீதிகளில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கலுகல, பிட்டவல, கினிகத்தேனை, கடவலை, தியகலை, வட்டவளை ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளிலும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன், குடாகம, கொட்டகலை, தலவாக்கலை, சென்கிளையார், சம்ர்செட், ரதல்ல, நானுஓயா உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி பனிமூட்டம் நிலவுவதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குரவத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வளைவுகள் நிறைந்த இந்த வீதிகள் மழை காரணமாக வழுக்கும் நிலை காணப்படுவதனால் பனி மற்றும் மழை நேரங்களில் தங்களுடைய வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு தமக்குரிய ஒழுங்கையில் மிகவும் அவதானமாக பயணிப்பதன் மூலம் வாகன விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.
தற்போது தனிமைப்படுத்தும் உரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதானால் மலையக வீதிகளில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கே.சுந்தரலிங்கம்.