விஜய்யின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் வியூகம்!

0
40
hindutamil

திரையுலகில் நடிகராக உச்சம் தொட்ட விஜய், இன்று தமிழக அரசியலில் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார். இந்த அபாரமான வளர்ச்சிக்கு பின்னால் திரைமறைவில் இருந்து மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவர்தான் அவரது மேலாளர் ஜெகதீஷ் பழனிசாமி.

சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக விஜய்யின் பிராண்ட் மதிப்பை உயர்த்தியதில் தொடங்கி, தமிழக வெற்றிக் கழகத்தின் டிஜிட்டல் ராஜ்ஜியம் வரை ஜெகதீஷ் மற்றும் அவரது ‘தி ரூட்’ நிறுவனம் ஆற்றிய பங்கு தற்போது மற்ற அரசியல் கட்சிகளின் பார்வையை ஒட்டுமொத்தமாக திருப்பியிருக்கிறது.

தமிழக அரசியல் வரலாற்றில் எம்ஜிஆருக்கு நிகரான ஒரு பிம்பமாக விஜய்யை இன்று கொண்டு வந்து நிறுத்தி இருப்பதற்கு பின்னால் பல காரணிகள் உள்ளன. அதில் ஜெகதீஷும், அவருடைய சோஷியல் மீடியா குழுவும் மிக முக்கியமான பங்காற்றியதை விவரம் அறிந்த யாரும் மறுக்க முடியாது.

விஜய்யின் அரசியல் வருகைக்கான அஸ்திவாரம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதல்ல. அது பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. இதற்குப் பின்னால் ஜெகதீஷின் ரூட் நிறுவனம் வெறும் சினிமா மேலாண்மை நிறுவனமாக மட்டுமின்றி, ஒரு மிகப் பெரிய தரவு பகுப்பாய்வு மையமாகவும் செயல்பட்டது.

சமூக வலைதளங்களில் விஜய்யின் ரசிகர்கள் எங்கே இருக்கிறார்கள், அவர்கள் எந்த மாதிரியான செய்திகளைப் பகிர்கிறார்கள், எதற்கெல்லாம் உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்பதை ரூட் நிறுவனம் மிகத் துல்லியமாக கண்காணித்தது. இதற்காக ஆயிரக்கணக்கான டிஜிட்டல் வல்லுநர்கள் பணியமர்த்தப்பட்டனர். குறிப்பாக, இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற தளங்களில் ஜென்ஸீ தலைமுறை இளைஞர்களைக் கவர ஒரு தனித்துவமான அல்காரித வியூகம் வகுக்கப்பட்டது.

சமூக வலைதளங்களில் விஜய்க்கான அல்காரிதம் எவ்வாறு இயங்குகிறது என்பதே ஓர் ஆச்சரியமான விஷயம்.

ஒரு சராசரி இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் ஒரு சிறிய வீடியோவையோ அல்லது ஒரு ஹேஷ்டேகையோ பார்த்தால், அடுத்த சில நிமிடங்களில் அவரது பக்கம் முழுவதும் விஜய் தொடர்பான செய்திகளாகவே மாறும் வகையில் அல்காரித நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதைச் சாத்தியமாக்க 0 முதல் லட்சக்கணக்கான ஃபாலோயர்களைக் கொண்ட ஆயிரக்கணக்கான ‘ஷேடோ ஐடிக்கள்’ உருவாக்கப்பட்டன. இவை ஒவ்வொன்றும் விஜய்யின் புகழைப் பாடும் வீடியோக்களையும், அவரது அரசியல் கருத்துகளையும் தொடர்ந்து இணையத்தில் பதிவிட்டுக் கொண்டே இருந்தன. இதன் மூலம், ஒரு செயற்கையான ‘டிஜிட்டல் அலை’ உருவாக்கப்பட்டது. இதுவும் இன்று சாதாரண பயனாளர்களின் அல்காரிதத்தை ஆக்கிரமித்து, விஜய்யை ஒரு தவிர்க்க முடியாத தலைவராக உருவாக்கியுள்ளது.

இதன் மையப்புள்ளி ‘ரூட் நிறுவனம் நிர்வகிக்கும் ஆயிரக்கணக்கான வாட்ஸ்அப் குழுக்களில் தான் இருக்கிறது. மற்ற அரசியல் கட்சிகள் தேர்தலின்போது மட்டுமே வாட்ஸ்அப் குழுக்களை தொடங்குகின்றன அல்லது ஏற்கெனவே இருக்கும் குழுக்களை வீரியமாக பயன்படுத்துகின்றன. ஆனால் ஜெகதீஷின் குழு, கடந்த ஐந்து ஆண்டுகளாகவே தமிழகத்தின் ஒவ்வொரு ரசிகர் மன்றத்தையும் ஒருங்கிணைத்து வாட்ஸ்அப் குழுக்களை வலுப்படுத்தியது.

இந்தச் சங்கிலித் தொடர் அமைப்பில், ஒரு செய்தி கிளம்பினால், அது அடுத்த ஐந்து நிமிடங்களில் தமிழகத்தின் லட்சக்கணக்கான இளைஞர்களின் கைபேசிக்குச் சென்றடையும் வகையில் ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

ஆரம்பத்தில் விஜய் படங்கள் பற்றியும், சமூக வலைதளங்களுக்கான சினிமா கன்டெண்ட் பற்றியும் மட்டுமே பேசப்படும் இடங்களில் வலம் வந்த இந்த வாட்ஸ்அப் குழுக்களில், போகப் போக விஜய்யை ஒரு குடும்ப உறுப்பினர் போன்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் பகிரப்பட்டன. பின்னாட்களில் விஜய்யின் அரசியல் வருகையை கொண்டாடும் இடங்களாக அவை மாறின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here