மலையகப்பகுதியில் நடைபெறுகின்ற சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 500 மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்ட சிறுவர் துஸ்பிரயோக எதிர்ப்பு ஊர்வலம் நேற்று (25) திகதி கொட்டகலையில் நடைபெற்றது.
குறித்த ஊர்வலம் கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக ஆரம்பித்து கொட்டகலை கொமர்சல் பகுதியில் அமைந்துள்ள லேக் விளையாட்டு மைதானத்தினை வந்தடைந்தது.
விழிப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிறுவர்கள் பதாதைகளையும் சுலோக அட்டைகளையும் காட்சி படுத்திய வண்ணம் பறிக்காதே பறிக்காதே சிறுவர் உரிமையினை பறிக்காதே.அழிக்காதே அழிக்காதே சிறுவர் வாழ்க்கையை அழிக்காதே போன்ற கோசங்களை எழுப்பிய வண்ணம் ஊர்வலத்தில் கலந்து கொண்டன.
அதனை தொடர்ந்து ஒளிச்சுடர் ஏற்றி சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிராக செயப்படுவதற்கு கையொப்பப் பெயர் பலகையில் கையொப்பமும் இடப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
குறித்த நிகழ்வின் போது சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிராக வீதி நாடகம் ஒன்றும் இடம்பெற்றது. வோல்ட் விசன் நிறுவனத்தின் அனுசரனையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு வோல்ட் விசன் பிராந்திய முகாமையாளர் பென்சிமன் தாசன்,திம்புல்ல பத்தனை பிரதேச முகாமையாளர் என்டனி லோரன்;ஸ்,தோட்ட முகாமையாளர்கள் கொட்டகலை வைத்தியசாலை வைத்திய பணிப்பாளர் சாவித்திரி,கிராம சேவகர்கள்,வர்த்தக சங்க தலைவர்கள்,அரச மற்றும்அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த பிரநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
மலைவாஞ்ஞன்