துருக்கி இராணுவப் புரட்சி – பதைபதைக்கும் நிமிடங்களின் தொகுப்பு!

0
129

அங்காரா – துருக்கியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த ஓர் இராணுவப் புரட்சியின் மூலம், நடப்பு அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்ற இராணுவத் தரப்புகள் முயற்சிகளில் ஈடுபட்டன.

தற்போது நிலமை கட்டுப்பாட்டில் இருப்பதாக துருக்கி பிரதமர் அறிவித்துள்ளார்.

இஸ்தான்புல் நேரப்படி அந்த பதட்டமான நிமிடங்கள் இதோ:

19.29 – இஸ்தான்புல் போஸ்போரஸ் மற்றும் ஃபாத்தி சுல்தான் மெஹ்மெட் பாலங்கள் மூடப்பட்டன. இதனை நேரில் கண்ட மலேசிய மாணவர்கள் ஸ்டார் இணையதளத்திடம் தெரிவித்துள்ளனர்.

19.50 – அங்காராவில் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதோடு, இராணுவ விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வானை வட்டமடித்தன.

20.02 – ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சி நடப்பதாக துருக்கி பிரதமர் பினாலி இல்டிரிம் அறிவித்து, அமைதி காக்கும்படி வலியுறுத்தினார். துருக்கி இராணுவத்தில் ஒரு தரப்பில் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

20.25 – ஜனநாயக ஒழுங்கைப் பாதுகாக்க தாங்கள் அதிகாரத்தைக் கையில் எடுத்திருப்பதாக இராணுவம் அறிவித்தது. எனினும் துருக்கியின் அனைத்து வெளியுறவு விவகாரங்களும் பாதுகாக்கப்படும் என்றும் இராணுவம் அறிவித்தது.

20.38 – துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் பாதுகாப்பாக இருப்பதாக செய்தி நிறுவனங்கள் அறிவித்தன.

20.47 – துருக்கி இராணுவத் தலைவர் உட்பட பிணைக்கைதிகள் அங்காராவிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் வைக்கப்பட்டனர்.

20.57 – துருக்கியில் பேஸ்புக், டுவிட்டர், யுயூடியூப் மற்றும் அனைத்து நட்பு ஊடகங்களும் முடக்கப்பட்டன.

20.58 – துருக்கியின் தேசிய ஒளிபரப்பு நிலையத்தில் இராணுவப் படைகள் நுழைந்தன.

21.18 – அதிபர் தரப்பில் இருந்து வெளிவந்த அறிக்கையில் அதிபரும், அரசாங்கமும் இன்னும் அதிகாரத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

21.22 – இராணுவப் புரட்சி முறியடிக்கப்படும் என துருக்கி பிரதமர் டுவிட்டரில் அறிவித்தார்.

21.35 – துருக்கி தேசிய ஒளிபரப்பு சேவை லண்டனில் இருந்து இயங்கத் தொடங்கியது.

21.51 – துருக்கி தலைநகர் அங்காராவில் இராணுவ ஹெலிகாப்டர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தின.

22.08 – துருக்கி நாடாளுமன்றத்தைக் குறி வைத்து பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டது.

22.26 – துருக்கி தலைநகரின் மையத்தில் இரண்டு மிகப் பெரிய குண்டுச் சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் வெளிவந்தன.

22.47 – குண்டர்களும், சட்டவிரோத கும்பலும் தான் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பின்புலமாக இருப்பதாக துருக்கி பிரதமர் அறிவித்தார்.

22.59 – துருக்கி விமானப் படை விமானங்கள் இராணுவ ஹெலிகாப்டர்களைச் சுட்டு வீழ்த்தின.

23.04 – அங்காரா சிறப்புப் படையைச் சேர்ந்த 17 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதாக துருக்கியைச் சேர்ந்த அனாடோலு செய்தி நிறுவனம் அறிவித்தது.

23.05 – தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துருக்கி அரசுக்கு  அமெரிக்க அதிபர் ஒபாமா ஆதரவு தெரிவித்தார்.

23.39 – அங்காரா நாடாளுமன்றத்தில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அனடோலு செய்தி நிறுவனம் அறிவித்தது.

23.52 – துருக்கி பிரதமர் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here