நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினைத் தொடர்ந்து நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் குறைந்த வருமானத்தை பெரும் பெருந்தோட்ட மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பல்வேறு சுமைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
மலையக நகரங்களில் உள்ள ஒருசில வர்த்தகர்கள் இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தினை சாதகமாக பயன்படுத்தி பொருட்களை பதுக்கி கொள்ளை விலையில் விற்று அதிக இலாபமீட்ட நினைக்கின்றனர். இவ்வாறான பொருளாதார நெருக்கடியில் மக்கள் வாழ்வதற்கு திணரிக்கொண்டு இருக்கும் போது இலாபமீட்ட முயற்சிப்பது மிகவும் கீழ்த்தரமான விடயம் இது இலாபமீட்டும் சந்தர்ப்பம் அல்ல எனவே நாங்கள் கடந்தவாரம் இந்த பொருட்களை பதுக்கும் வர்த்தகருக்கு எதிராக சட்ட நடவடிக்கையொன்றை முன்னெடுக்குமாறு நுவரெலியா நுகர்வோர் அதிகார சபையிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய அட்டன் டயகம அக்கரப்பத்தனை உள்ளிட்ட ஒருசில பிரதான நகரங்களில் இருந்து 600 க்கும் மேற்பட்ட வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் ஒருசில சிலிண்டர்களை நீதிமன்றத்தின் உத்தரவுக்குமைய விற்பனை செய்து வெற்று சிலிண்டர்களை உரிய வர்த்தகரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் விற்கப்பட்ட பணத்தினை அரசாங்க கணக்கில் வைப்பில் இடப்பட்டதாகவும் இன்னும் ஒருசில சிலிண்டர்களை கைப்பற்றப்பட்ட போதே பொதுமக்களிடம் உரிய விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் எஸ்.சச்சிதானந்தன் தெரிவித்தார்.
இன்று 12.06.2022 அட்டன் பகுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இன்று மலையகப்பகுதியில் ஒருசில வர்த்தக நிலையங்களில் பழைய விலைகளுக்கு பெற்றுக்கொண்ட நுகர்வு பண்டங்களை அதன் புதிய விலைக்கு மாற்றப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர். ஒருசில டின்மீன்களில் விலைமாற்றப்பட்டு சுமார் 200,300 ரூபா அதிகமாக வைத்து விற்கப்படுகின்றன.
இவ்வாறான பொருட்கள் இன்று நுகர்வோர் அதிகார சபையினால் மீட்கப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. இன்னும் சிலர் பொருட்கள் எதிர்காலத்தில் விலை அதிகரிக்கும் என்று எண்ணி அரிசி, சீனி , மா , பால்மா, டின்மீன் உள்ளிட்ட பல உணவுப்பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளன. இது மிகவும் மோசமான செயலாகும். மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை மேலும் மேலும் துன்புறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. வர்த்தகர்களும் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
இன்று அவர்கள் வர்த்தகம் செய்வது இந்த மக்களை நம்பியே. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய நேரத்தில் உதவி செய்யாது கொள்ளை இலாபம் ஈட்டுவது செய்வதற்கரிய செயலல்ல. ஆகவே உங்கள் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் மக்களுக்கு இந்த நேரத்தில் பொருட்களை பதுக்காது நியாயவிலையில் பெற்றுக்கொடுக்க வேண்டும் என நான் அவர்களிடம் பணிவாக வேண்டுகிறேன். இதற்குமேலும் அவர்கள் இவ்வாறு அதிகவிலைக்கு விற்பனை செய்வார்கள் ஆனால் அது தொடர்பாக நுவரெலியா நுகர்வோர் அதிகார சபைக்கு உடனடியான தெரியப்படுத்துமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
மலைவாஞ்ஞன்