நாடு தளுவிய ரீதியில் வைத்தியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டம் காரணமாக வைத்தியசாலையில் சுகாதார சேவைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக பெரும் தோட்ட மற்றும் நகர்புற மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டு மக்கள் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாரிய சிரமங்களுடனேயே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் வைத்தியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக சாதாரண பொது மக்கள் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இன்றைய தினம் (08) திகதி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக தூர பிரதேசங்களிலிருந்து வருகை தந்த பலர் வைத்தியகளின் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
பலர் தனியார் வைத்தியசாலைகளில் மருந்து பெருவதற்கு பணம் இல்லாது இருப்பதாகவும் ஒரு சிலர் வைத்தியசாலை வளைவில் காணப்படும் மூலிகை இலைகளை பறித்துக்கொண்டு செல்வதனையும் காணக்கூடியதாக இருந்தன.
இதே நேரம் பல பெற்றோர்கள் சுகயீனமடைந்த பிள்ளைகளை அழைத்து கொண்மு மருந்து எடுப்பதற்காக வைத்தியசாலைக்கு வருகை தந்த போதிலும் மருந்து கிடைக்காத காரணமாக வேதனையுடன் வீடு திரும்பினர்.
இதே வேளை வைத்தியசாலையில் கிளினிக்,வெளி நோயாளர் பிரிவு உள்ளிட்டவை இன்று வெறிச்சோடி காணப்பட்டன.
அத்தியவசிய சேவைகள் மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு உள்ளிட்டவை வழமை போல் இயங்கியதை காணக்கூடியதாக இருந்தன.
இதே நேரம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் இன்சூலின் தடுப்பூ உள்ளிட்ட பல மிகவும் அவசியமான மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு காரணமாக வழங்கப்படுவதில்லை என்று இதனை தனியார் மருந்தகங்களில் பெற்றுக்கொள்ள அதிக பணம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பணம் இல்லாததன் காரணமாக பலர் சிகிச்சை பெறாதிருப்பதாகவும் இதனால் எதிர்காலத்தில் பாரிய சுகாதார பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் பலரும் தெரிவிக்கின்றனர்.
எனவே இது குறித்த அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.
மலைவாஞ்ஞன்