‘பாரதிராஜாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது’- தங்கை பாரதி உருக்கம்!

0
48
dailythanthi

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜாவின் மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், தேனி அல்லிநகரத்தில் உள்ள குடும்ப வீட்டில் வசித்து வரும் அவரது தங்கை பாரதி, அண்ணனின் நினைவுகளை பகிர்ந்து கொண்டு உருக்கமாக பேசியுள்ளார்.

கண்ணீர் மல்க பேசிய அவர், “எனது அண்ணனின் இயற்பெயர் சின்னச்சாமி. திரைப்படத் துறைக்கு சென்ற பிறகுதான் தனது பெயரை பாரதிராஜா என்று மாற்றிக் கொண்டார். ஆனால் வீட்டில் நாங்கள் அனைவரும் அவரை பால்பாண்டி என்றுதான் அழைப்போம். என் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தார். சிறுவயதில் என்னை செல்லமாக கொஞ்சுவார். அதே நேரத்தில் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கண்டிப்பும் செய்வார்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “இளம் வயதிலேயே நாடகங்களில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டார். ஆட்களை ஒன்றுசேர்த்து நாடகங்கள் நடத்துவார். அவர் பெரிய ஆளாக வருவார் என்று அப்போதே நினைத்தேன். சென்னைக்கு செல்லும் முன், ‘எப்படியாவது சாதித்து விடுவேன். சாதிக்காமல் திரைப்படத் துறையை விட்டு ஊருக்கு திரும்ப மாட்டேன்’ என்று உறுதியாக கூறினார். அவரது முதல் திரைப்படம் வெளியானபோது குடும்பத்தினருடன் சேர்ந்து பார்த்து மகிழ்ந்தோம். இன்று அவருடைய இழப்பு எங்கள் குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாக உள்ளது” என்று உருக்கமாக தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here